கலகக்காரனின் குரல்

சினிமா வந்தபிறகு நாடகம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவை இழந்ததைப்போன்ற காலகட்டம் சலனப்படங்களின் வருகையால் மெளனப் படங்களுக்கும் ஏற்பட்டது. அதுவரை ஒளியை மட்டும் தரிசித்து வந்த மக்களுக்கு ஒளியும் ஒலியும் சேர்ந்து வெளியான சலனப்படங்களை காண்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட அவர்கள் தொடர்ந்து மெளனப்படங்களை புறக்கணிக்க தொடங்கினார்கள். காட்சி ஊடகத்தின் வளர்ச்சியை ஆராதித்து சலனப்படங்களை கொண்டாடத் தொடங்கினார்கள். இத்தகைய காலகட்டத்தில் மெளனப்படங்களின் தயாரிப்பாளர்களும், அதன் படைப்பாளிகளும், பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களில் மெளனப்படங்களின் முடிசூடா அரசனாகிய விளங்கிய சார்லி சாப்ளினும் ஒருவராக இருந்தார். 


இளமைப்பருவம் தொட்டு, பரமபத பாம்புகளை மட்டுமே அவருக்கு பரிசளித்துக்கொண்டிருந்த வாழ்கை, அவருக்கு மெளனப்படம் எனும் ஏணிக்காலத்தை சிறிதுகாலம் கொடுத்துவிட்டு பின் திரும்பவும் சலனப்படங்களின் மூலம் திரும்பவும் பாம்புக்காலங்களை பரிசளித்தது. சார்லி தொடர்ந்து இறங்குமுகம் கண்டார். காலியான அரங்கங்களில் ஆங்காங்கே எதோ வெறுப்புடன் தனித்து அமர்ந்திருந்த ஒரு சிலருக்காக மட்டும் உலகப்பெரும் நகைச்சுவை நடிகரின் திரைபிம்பம் தன் காமொடிகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. பின்னர் மக்களின்,அரங்க முதலாளிகளின், தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்குப் பின்னர் சார்லி மெளனப்படங்களை தொடர்ந்து எடுக்கும் தன் முடிவைக் கைவிட்டார். பின்னர் சிலகாலம் கழித்து சார்லி சாப்ளினின் முதல் சலனப்படம் வெளியானது. 

"தி கிரேட் டிக்டேட்டர்" சார்லி சாப்ளினின் முதல் சலனப்படம்,அரசியல் பேசும் சினிமாக்களின் பிள்ளையார் சுழி, உலகப்பெரும் சர்வாதிகாரியை அவரின் சமகாலத்திலேயே பகடி செய்து எதிர்விமர்சனம் வைத்த திரைப்படம், என பல சிறப்புகள் இந்த திரைப்படத்திற்கு உண்டு. ஹிட்லரின் கோரமுகத்தை உலகம் தரிசித்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த துணிச்சலுடன், அவரின் பாசிச சிந்தனைகளை, அபிலாஷைகளை, நேர்த்தியாக பகடி செய்திருந்தது கிரேட் டிக்டேட்டர். படத்தில் சார்லி இரு வேடங்களை ஏற்றிருந்தார் ஒரு பாத்திரம் சர்வாதிகாரி ஹிட்லராகவும் மற்றொரு பாத்திரம் போருக்கு சென்ற முடிதிருத்தும் தொழிலாளியாகவும் நடித்திருந்தார். முடி திருத்தும் தொழிலாளி ஆள்மாறாட்ட குழப்பத்தால் சர்வாதிகாரியான கதை. (தமிழில் இந்தக்கதை உத்தமபுத்திரன், இம்சை அரசன் என பல பரிமாணங்கள் எடுத்தை நாம் இங்கே நினைவுக்கு நிறுத்தலாம்.) முடிதிருத்தும் தொழிலாளியான சார்லி சர்வாதிகாரியாக இடம்பெயர்ந்த பின் அதுவரை திரையில் ஒலிக்காமலிருந்த சார்லிசாப்ளின் எனும் அந்த கலகக்காரனின் குரல் திரைப்பிரதியின் வழியே முதன்முறையாக ஒலிக்கிறது. 

                                                       

" என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஆட்சியாளனாக இருக்க பிடிக்கவில்லை. அதுஎன் வேலையும் அல்ல, ஆட்சி செய்யவோ ஆக்கிரமிப்பு செய்யவோ எனக்குவிருப்பமில்லை. ஒரு பகுதி மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவோ என்னால்
முடியாது.எல்லாரையும் அன்பால் நிறைக்கவே நான் விரும்புகிறேன். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான இடமொன்று ஒன்று உள்ளது.

எல்லா வளங்களையும் செழிப்புகளையும் அனுபவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் நமது அறிவு நம்மை கடுமையான மனிதர்களாக மாற்றி விட்டது. ஒரு இயந்திரத்தைப் போல அன்பற்ற மனிதர்களாக வாழத்தூண்டுகிறது. சர்வாதிகாரிகளின் நோக்கத்திற்கு நீங்கள் பலியாகாதீர்கள்

நாம் வேகத்தை வளர்த்துள்ளோம்
ஆனால் நம்மை உள்ளே அடைத்துள்ளோம்
பெருவளம் கொழிக்கும் இயந்திரங்கள்
நம்மை போதாமையில் விட்டுள்ளன.
நமது அறிவு நம்மை வெறுப்புடையோராக்கியுள்ளது.
நமது கெட்டித்தனம் நம்மை
கடுமையானோராயும், இரக்கமற்றோராயும் ஆக்கியுள்ளது.

மிக அதிகம் சிந்திக்கிறோம்; மிகச் சிறிதே உணர்கிறோம்.
இயந்திரங்களை விடவும் நமக்குத் தேவையானது மனிதத்தன்மை.
கெட்டித்தனத்திலும் மேலாக நமக்குத் தேவையானவை
இரக்கமும், மென்மையும்.
இப்பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையானதாகும்,
யாவும் இழக்கப்பட்டுவிடும்.
………….
எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்

துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது.

இனி மனிதர்களுக்கு இடையே உள்ள விரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!

எல்லாருக்கும் வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் உலகாகும் அது. இளையவருக்கு எதிர்காலமும்,மூத்தோருக்கு பாதுகாப்பும் தரும் உலகை உருவாக்குவோம் என்று சொல்லித்தான் சர்வாதிகாரிகள் எழுகிறார்கள். அப்படி ஒன்று நடப்பதே இல்லை. பெரும் பொய் அது,அது அவர்களால் நடக்காது. ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்று சேர்வோம்;புத்தம் புது உலகை படைப்போம் -

வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! வெறுப்பு,பேராசை, பொறுமையின்மை ஆகியவற்றை கடந்த தேச எல்லைகளை துறந்த புத்துலகை உருவாக்க முயல்வோம் நாம். விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும். அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும். 

இதுதான் அந்தக்கலகக்காரனின் முதல் குரல். 

மக்களின் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். - April 16

Comments

Popular Posts