நகர்ப்புறத்து மீன்கள்:


“ஹலோ வெரி குட்மார்னிங் சிவக்குமார் சார். நான் …. …… லைப் இன்ஸூரன்ஸ் கம்பெனில இருந்து சரவணன் பேசறேன் சார்”
“…”
“ஹலோ சார்”
“வண்டானுக எச்சிக்கல நாய்க காலங்காத்தாலயே … ” பீங்..பீங்..பீங்
ஏனோ இந்த நகரம் தந்த முதல் மாத சம்பளம் என்னை அவ்வளவு மகிழ்ச்சியாக வைக்கவில்லை. இவ்வளவு பணம் இருந்தும் வெம்மையாகவே இருந்தது மனம்.. இந்த நகரத்தின் கொடிய தனிமையை, என் சோகங்களை சொல்லி அழ அல்லது சொல்லாமல் அழ என்னைப்போலவே ஒரு ஜீவனை இந்த காசுக்குள் வாங்கிவிடமென்று மனம் சொன்னது..
பட்டவர்த்தனமாக என்னைதான் திட்டுகிறார் என தெரிகிறது…தெரிந்து என்னவாகப் போகிறது காலை ஒன்பதரைக்கு ஆரம்பித்த இந்த டெலிமார்க்கெட்டிங்கில் இந்த அரைமணி நேரத்திற்குள்ளாக கிட்டத்தட்ட இது 25ஆவது பட்டம்… பொத்தாம் பொதுவாக நாய் என கூறினால் ஒருவேளை ஹட்ச் விளம்பரநாய் போல சொகுசு நாயாகவோ அல்லது நடிகைகள் கொஞ்சும் உயர் ரக நாய் எனவோ பொருள் பட்டு விடக்கூடாதென குப்பைத் தொட்டியில் எச்சில் இலைகளை மேயும் நாயின் மீதாக மிக சரியாக குறி வைத்து எறியப்படும் கல் போலத்தான் செவியில் மோதியிருந்தது அந்த சொல்.
வேலைக்கு சேர்ந்த முதல்நாள் மேனேஜர்  இது பாலிசி ஹோல்டர்களின் பணம் புழங்குகிற இடம்.. உன்னை நம்பும் கஸ்டமர்கள் நிறைய பணம் கொண்ட செக்குகளையோ அல்லது பணத்தையோ உன்னிடம் கம்பெனியில் கட்ட சொல்லித் தரலாம், அப்படி வந்த எதாவது பணத்தை நீ கையாடல் செய்து தலைமறைவாகி விட்டால் என்ன செய்வது ஆதலால் உன் ஒரிஜினல் சர்டிபிகேட்டுகளை ஒப்படைத்துவிடு என்று சொன்னார்..
”நம்பிக்கை இல்லாத இடத்தில் எனக்கெதுக்கு சார் வேலை, தேவையில்லை”யென தூக்கிப்போட்டுவிட்டு வெளியேற என் பசி முதலில் அனுமதிக்கவில்லை அப்படி அது அனுமதித்திருந்தாலும் என் ரூம்மேட் முருகேசன் நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டான், முருகேசனுக்கும் எனக்குமானது 10 வருட பழைய நட்பு… இந்த இடத்தில் பழைய என்பதற்கு பொருள் இப்போது இல்லை என்பதேயாகும் எப்படி இல்லாமல் போனது என்பதற்கும் காரணம் இருக்கிறது. அது இந்த பெரு நகரத்தில் தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள மன்றாடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பேச்சிலர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களின் பேராசைகளுக்கும் இடையிலான கண்ணி அது…
ஸ்கூல் மெட்டாக, காலேஜ் மெட்டாக உண்பது,குடிப்பது என எல்லாவற்றிலும் வேறுபாடு இல்லாது பங்கி ருசித்து கழித்திருந்த நட்பு வாழ்கையின் அடுத்த கட்டங்களில் தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கத் தொடங்கியிருந்தது அல்லது அப்படி மாறி விட்டிருந்தது அவனுக்கும் எனக்குமான நட்பில் பெரிய விரிசல் என்று ஒன்றுமே இல்லை இருந்தும் ஒரு பீரை,ஒரு சிகரெட்டை,ஒரு பரோட்டாவையெல்லாம் பங்கிடத் தெரிந்திருந்த நட்பு, ஒரு 10க்கு 8ரூமில் பங்கீடு என்று வரும் போது முருகேசனை அப்படித்தான் அன்று பேச வைத்தது
“ஹலோ மச்சி நான் சரவணன் பேசறேன் டா”
“சொல்டா மச்சி எப்டி இருக்க? ”
“நல்லா இருக்கேன் மச்சி நீ எப்டி இருக்க ”
“ம்ம் பரவாலடா ஒரு மாதிரியா இருக்கேன்..என்ன திடிர்னு போன்”
“மச்சி ஒரு தேவையாதான் கூப்பிட்டேன்… எனக்கு ஒரு வேலை வேணும்டா இங்க இதுக்குமேல இருக்க என்னால முடியாது.. நானும் சென்னைக்கு வரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. கடன்தொல்லை ஜாஸ்தியாகி இருந்த நிலத்த ரியல் எஸ்டேட்காரனுக்கு வித்து வந்த பணத்துல கடன் எல்லாம் அடச்சிட்டு அய்யா இப்போ டவுன்ல ஒரு ஏடிஎம்ல செக்யூரிட்டியா வேலைக்கு போறார், தங்கச்சி இப்போ டென்த் படிக்கிறா… அய்யா பாவம்டா காடு கழனின்னு கயித்துக் கட்டில்ல சொகமா படுத்திட்டு காவல் காத்துகிட்டிருந்தவர் எதோ ஒரு எடிஎம் வாசல்ல ஒத்த சேர்ல உக்காந்து கண்ணு முழிச்சு வேல பாக்குறத நினைச்சா கஷ்டமா இருக்கு மாப்ள”
“நான் அப்பவே சொன்னேன் இல்லடா, விவசாயம் பாத்திட்டு ஊர்ல கிடந்தா வேலைக்காவாது சென்னைக்கு வந்து எதாவது பொழப்பப் பாருன்னு ஆனா நீ அய்யா பாக்குற விவசாயத்துக்கு ஒத்தாசையா இருக்கிறது தான் சந்தோசம் தவிர அடுத்தவன்கிட்ட பேச்சு வாங்கிட்டு செய்யிற வேலையெல்லாம் உனக்கு சரிபட்டு வராதுன்னு சொன்ன ”
“சொன்னந்தான் இல்லன்னு சொல்லல மழை இல்ல… கூலிக்கு ஆள் கிடைக்கல யாருமே இப்ப நிலத்துல இறங்கி வேல பாக்க விரும்பறதில்ல மச்சி… வட்டிக்காரன் கொடச்சல் வேற தாங்கல என்னடா செய்ய…. சாகுற வரைக்கும் விவசாயம்தான் பாப்பேன்னு வைராக்கியமா இருந்த அய்யாவையே வாட்ச்மேனாக்கி அழகு பாக்குது காலம்.. நானெல்லாம் எம்மாத்திரம் மச்சி ”
“சரி இப்போயென்ன என்ன செய்ய சொல்ற? ”
“மச்சி நான் அங்க வரேண்டா உங்கூடவே தங்கிட்டு எதுனா வேலை தேடிக்கறேன் இல்ல நீ எதாவது வேலை பாத்து சொல்லு”
“டேய் மச்சி இந்த ஊர்லாம் உனக்கு ஒத்துவரும்னு எனக்கு தோணலடா அதுவும் இல்லாம நானே இங்க ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனில மார்கெட்டிங் வேலைல திண்டாடிகிட்டு வீடுங்குற பேர்ல ஒரு புறாக் கூண்டுல ஒண்டிகிட்டு இருக்கேன்… ஹவுஸ் ஓனர் வேற செம ஸ்டிரிக்ட்டு இன்னொரு ஆள சேத்துப்பானான்னு தெரில”
“மச்சி எனக்கு உன்ன விட்டா அங்க யார தெரியும் ப்ளீஸ் டா எதாவது ஹெல்ப் பண்னு ”
“ஸாரி டா மச்சி இப்போதைக்கு இத தவிர வேற எதையும் என்னால சொல்ல முடியாது…வைக்கிறேன்டா கொஞ்சம் வொர்க் இருக்கு ”
பின்னாட்களில் எனது தொடர்ச்சியான சிலபல அலைபேசி அழைப்புகளில் ”தாங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் தற்சமயம் பிஸியாக இருப்பதால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்” என அவனின் சிந்தனையொத்த ஒரு ரெக்கார்டிங் பெண் குரல் பேசிக்கொண்டிருந்த நாட்களில் பத்து வருட நட்பு மேலே சொன்ன பொருளில் பழைய நட்பாகத்தான் தோன்றியது .
பின்னொரு நாளில் நட்பை மீண்டும் புதுப்பித்த ஒரு அழைப்பாக அவனது கால் தானாக வந்து சேர்ந்தது.
“மச்சி நான் முருகேசன் பேசறேன் ஸாரி மச்சி இடையில கொஞ்ச நாளா பிஸியா இருந்தேன் அதான் உன் ஃபோன் அட்டன் பன்ன முடியல, அப்புறம் ஒரு முக்கியமான விசயம் உனக்கு என் இன்ஸூரன்ஸ் கம்பெனிலயே வேலை பாத்திட்டேன்… நீ வர சண்டே இங்க இருக்கிற மாதிரி வந்திரு மண்டே உனக்கு இண்டர்வியூ ஒகே வா ”
ஓயாது அவனிடம் பேச முயற்சித்து கொண்டிருந்ததால் வந்த கனவோ என எந்த சந்தேகமும் படாமலே முற்றிய நினைவுடன் தவித்திருந்த ஒரு நன்னாளில் வந்திருந்தது அவனது ஃபோன் கால், அதே சமயம் எப்படி தானாக வந்தது சரவணனுக்கு என் மீதான திடிர் அக்கறை என்ற கேள்வியும்..
விடை ஒரு ஞாயிறில் இந்த பெரு நகரம் வந்திறங்கிய போது கிடைத்தது..
“மச்சி வேலை கிடைக்கிறதுல எந்த கஷ்டமும் இல்ல கண்டிப்பா கிடைக்கும் என் டீம் லீடர் ஆள்கிடைக்காம திணறிகிட்டிருந்தார் அவர்ட்ட உன்ன பத்தி சொன்னேன் உனக்கு எக்ஸ்பிரியன்ஸ் இல்லன்னு மொதல்ல தயங்கினார் அப்புறம் என் பிரண்டுங்கிறதால ரெகமெண்ட் பன்றேன்னு சொல்லிட்டார் ஸோ உனக்கு வேலை கிடைக்கிறதுல எந்த பிராப்ளமும் இருக்காது”

Comments

Popular Posts